நெல்லை, பாளை பகுதிகளில் உள்ள ஓரிரு லாட்ஜ்களில் விபசாரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடப்பதாக மாநகர போலீசுக்கு தகவல் கிடைத்தது.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளை ஆசைவார்த்தை கூறி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பாளை போலீசார் பிரபல லாட்ஜில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 13 வயது மதிக்கத்தக்க மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவி நெல்லையில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படிப்பதாகவும், பெற்ற தாயே இங்கு அழைத்து வந்து விட்டதாகவும் கூறினார். இதையடுத்து அவரது தாயிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதை ஒப்புக்கொண்டார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரது செல்போன் நம்பரை வைத்து விபசார கும்பலை பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி பாளையை சேர்ந்த புரோக்கர் குமார் மற்றும் லட்சுமி, தாயம்மாள் (எ) குட்டி, அருணா, ஆகிய 4 பேரை கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்தனர். இதில் தொடர்புடைய சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சண்முகவேல்ராஜ் (33) என்பவரை தேடி வந்தனர்.
தனியார் ஆம்னி பஸ்சில் தலைமை மெக்கானிக் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த இவரது சொந்த ஊர் நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம். இவர் பலமுறை, மாணவியை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் இதற்காக மாணவியின் தாய்க்கு பெரிய தொகை கொடுத்துள்ளார்.
போலீசார் தேடுவதை அறிந்த சண்முகவேல்ராஜ் கேரளாவுக்கு தப்பிச் சென்று விட்டார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் கேரளா சென்று அவரை கைது செய்தனர். மேலும் மாணவியின் தாய் மற்றும் டவுனைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வின் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


