சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் புதன்கிழமை முதல் வெளியாகலாம் எனக் கூறியுள்ளது .
நீதிபதி கே வெங்கட்ராமன் பலமணிநேர விசாரணைக்குப் பிறகு செவ்வாய் இரவு 10 மணி அளவில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தமிழக அரசு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி குற்றவியல் சட்டம் பிரிவு 144ன் கீழ் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விதித்திருந்த இருவாரத் தடையாணையை நிறுத்திவைத்து உத்திரவிட்டார்.
ஆயினும் வழக்கு விசாரணை தொடருமென்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சென்னை உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யவுள்ளது.
இப்படம் தமது மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, திரைப்படத்துக்கு இருவார காலத் தடையை தமிழக அரசு விதித்தது.
இதை எதிர்த்து கமல்ஹாசன் நீதிமன்றம் சென்றார்.
இலங்கையில் இப்படம் இன்னும் வெளியாகாத சூழலில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன.
ஆயினும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வேறு பல நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.


